சென்னை வானிலை மையம் அறிவிப்பு:
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. 150க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, அவலாஞ்சியில், 31 செ.மீ., மழை பெய்துள்ளது.
வால்பாறை, மேல் பவானி, 25, சின்னக்கல்லார், 23, சின்கோனா, வால்பாறை, 17, மாஞ்சோலை, 10, குண்டாறு அணை, 7, தேக்கடி, செங்கோட்டை, 6, திற்பரப்பு, 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில், இன்று மிக கனமழை பெய்யும். இதற்காக ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில், இன்று கனமழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில், நாளை கனமழை பெய்யும்.
சென்னையில் இன்று, வானம் மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில், வரும், 19ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.