தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இயல்பைவிட 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பால் வெப்பத் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனால் வெளியில் செல்வோருக்கு உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இது செப்., 23 வரை நீடிக்கும். சென்னையில் பகல் நேரத்தில் 102 டிகிரி பாரன்ஹீட், அதாவது 39 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தன்னார்வ வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது:
கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வரவேண்டிய ஈரக்காற்று திசை மாறியதால், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழக்கத் துவங்கியுள்ளது.
இதையடுத்து செப்., 22ல் வங்கக்கடலில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாகி அது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது எனவும், இந்த நிகழ்வின்போது மேற்கில் இருந்து தமிழகம் நோக்கி ஈரக்காற்று திரும்ப வாய்ப்புள்ளது. இதனால் செப்., 22க்குப் பின், வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.என கூறியுள்ளார்.