சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதில் புதிய நடைமுறையை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை பல்வேறு விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் குறிப்பிட்ட ஐந்து விதிமீறல்களுக்கு மட்டுமே நேரடியான அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விதிமீறல்கள் அனைத்தும் சிக்னல்களில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வாகன ஓட்டிகள் மத்தியில் ஒரு கலவையான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக அபராதம் விதிக்கப்படும் அந்த ஐந்து முக்கிய விதிமீறல்கள் எவை என காவல்துறை பட்டியலிட்டுள்ளது:
- அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்: வேக வரம்புகளை மீறி அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதால், இது நேரடி அபராதப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
- ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்: இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வது உயிரிழப்புக்கான முக்கிய காரணமாகும். இதன் காரணமாக, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு இனி நேரடி அபராதம் விதிக்கப்படும்.
- சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்: நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது கடுமையான விதிமீறலாகக் கருதப்படுகிறது. விபத்து சமயங்களில் பெரும் பாதிப்புகளைத் தடுக்கும் சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு நேரடியாக அபராதம் விதிக்கப்படும்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்: இது மிகவும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற செயலாகும். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தனக்கும் பிறருக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைவதால், இதற்கு கடுமையான நேரடி அபராதம் விதிக்கப்படும்.
- பைக்குகளில் இருவருக்கு மேல் பயணித்தல்: இருசக்கர வாகனங்களில் மூவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானதாகும். இது விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இந்த விதிமீறலுக்கும் நேரடி அபராதம் உண்டு.
காவல்துறையின் இந்த புதிய அணுகுமுறை, சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறும் சில்லறை குற்றங்களை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரப் பகுதிகளில் காவலர்கள் அபராதம் விதிக்கும்போது ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்த்து, சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்து, தானியங்கு முறையில் அபராதம் விதிக்கும் நடைமுறை மேலும் வலுப்படுத்தப்படும். இது போக்குவரத்து காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, முக்கிய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்த உதவும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த மாற்றம் வாகன ஓட்டிகள் மத்தியில் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கும்போது, புகைப்படங்களில் உள்ள தெளிவின்மை அல்லது அடையாளம் காண்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து சிலர் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த புதிய நடைமுறை விதிகளை மீறுவோருக்கு மேலும் எச்சரிக்கையாக இருக்குமா அல்லது கண்காணிப்பில் தப்பிக்க வழி தேடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.