தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நாளை (செப்டம்பர் 28) நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்தத் தேர்வை, மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் எழுதவுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த ஜூலை 15ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, குரூப்-2 (நேர்முகத் தேர்வு பதவிகள்) மற்றும் குரூப்-2ஏ (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பிரிவுகளில் காலியாக உள்ள மொத்தம் 645 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
காலிப் பணியிடங்களின் விவரம்:
- குரூப்-2 (நேர்முகத் தேர்வு பதவிகள்): உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய பதவிகளில் 50 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- குரூப்-2ஏ (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்): முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய பதவிகளில் 595 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இரண்டு பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 645 அரசுப் பணியிடங்களுக்காக, 5.53 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் நாளை முதல்நிலைத் தேர்வை எதிர்கொள்ள உள்ளனர். தேர்வர்கள் அனைவரும் தேர்வு விதிமுறைகளைப் பின்பற்றி, சரியான நேரத்திற்குத் தேர்வு மையங்களை அடையுமாறு TNPSC அறிவுறுத்தியுள்ளது.