தமிழகத்தின் தொழில் நகரமான திருப்பூரில் தற்போது நிலவி வரும் கடுமையான சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, பொதுமக்களின் அன்றாட உணவுத் தேவையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் நாகராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் வெளியிட்ட தகவல்கள், திருப்பூரில் தங்கியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் மட்டும் தினசரி சுமார் 1,500 Gas சிலிண்டர்கள் உணவகங்களின் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், கடந்த சில நாட்களாக நிலவி வரும் விநியோகச் சிக்கல் காரணமாக, போதிய அளவில் சிலிண்டர்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, இன்னும் இரண்டு நாட்களில் திருப்பூரில் உள்ள பெரும்பாலான உணவகங்களை முழுமையாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று நாகராஜன் எச்சரித்துள்ளார்.
திருப்பூர் மாநகரைப் பொறுத்தவரை, அண்டை மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிகம். தினசரி சுமார் 2 லட்சம் பேர் உணவகங்களையே நம்பி உள்ளனர். இதில் 50 ஆயிரம் பேர் காலை முதல் இரவு வரை மூன்று வேளை உணவிற்கும் ஓட்டல்களையே முழுமையாகச் சார்ந்துள்ளனர். தற்போது நிலவும் Gas சிலிண்டர் தட்டுப்பாட்டால், இந்தத் தொழிலாளர்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, அனைத்து வகையான உணவுகளையும் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. “எங்களிடம் இருக்கும் மிகக் குறைந்த அளவிலான Gas இருப்பைக் கொண்டு, அடுத்த இரண்டு நாட்களுக்கு மட்டுமே உணவகங்களை இயக்க முடியும். அதுவும் கூட அனைத்து வகை உணவுகளையும் வழங்க முடியாது. தக்காளி சாதம், கிச்சடி போன்ற மிக எளிமையாகத் தயார் செய்யக்கூடிய உணவு வகைகளை மட்டுமே வழங்கத் திட்டமிட்டுள்ளோம்,” என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று ஏற்பாடாக விறகு அடுப்புகளைப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், நவீன உணவகங்கள் அனைத்தும் Gas அடுப்புகளுக்கு ஏற்றவாறு கட்டமைக்கப்பட்டுள்ளன. திடீரென விறகு அடுப்பிற்கு மாறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. மேலும், விறகு அடுப்புகளைப் பயன்படுத்தினால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. புகை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக இதற்கு அனுமதி கிடைப்பதும் கடினம். இதனால் விறகு அடுப்பு மூலம் அனைத்து வகை உணவுகளையும் தயாரிப்பது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது.
திருப்பூர் போன்ற ஒரு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தில், Gas சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்படுவது தொழிலாளர்களின் வருகையையும், உற்பத்தியையும் பாதிக்கக்கூடும். எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இல்லையெனில், அடுத்த 48 மணி நேரத்தில் திருப்பூரில் உணவு நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

