ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, விடுதலை எண்ணத்தை மட்டுமே நெஞ்சில் விதைத்து, மரணத்தைத் துச்சமென நினைத்து, தாய் மண்ணைக் காக்க எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்கொண்டு அவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்கள் மருது சகோதரர்கள், அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை – கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அவர்களது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில், மூத்த அமைச்சர்கள் மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
” சிவகங்கைச் சீமையின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இம்மண்ணில் நிலைத்திருக்கும் மருது சகோதரர்கள் நினைவு நாள். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடும் உணர்வை அந்நாளிலேயே விதைத்து, தலைசிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்! இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம்! ” என தெரிவித்துள்ளார்.

