இது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: சுகாதாரத் துறையில் தமிழகம் சிறப்பான சாதனைகள் செய்து, சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. ஏழை மக்களுக்காக காப்பீட்டு திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி 2009ல் துவங்கினார். இதில், கடந்த ஜூன் மாதம் வரை ரூ.13,625 கோடி செலவில், 1.4 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு செப்.,15ம் தேதி 1,353 அவசர ஊர்திகளுடன் ‘108’ அவசரகால பராமரிப்பு சேவை திட்டம் துவங்கப்பட்டது. தமிழகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், அவசர ஊர்தி சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். சாலை போக்குவரத்து விபத்துகளுக்கும் இலவச அவசர சிகிச்சை வழங்கும் ‘இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48’ திட்டம் கடந்த 2023ம் ஆண்டு துவங்கப்பட்டது.
இத்திட்டத்தில் கடந்த மே மாதம் வரை ரூ.2.21 பில்லியன் செலவில் 2,52,981 நோயாளிகள் கட்டணமில்லா சிகிச்சையைப் பெற்றுள்ளனர். இறந்தவர்களிடம் இருந்து உடல்உறுப்புகளை தானமாகப் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம் 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 7,783 உறுப்புகள், 3,950 சிறிய உறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாகப் பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதில் தமிழகம் தொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. உறுப்பு தானம் செய்யப்பட்ட உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படுகிறது. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் 2021ம் ஆக.5-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், ‘மக்களைத் தேடி ஆய்வகம்’ திட்டம், ‘இதயம் காப்போம்’ திட்டம், ‘சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம்’, ‘தொழிலாளரைத் தேடி மருத்துவம்’ திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.