பெருங்களத்தூர், செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை கைவிடாமல் அதற்கு ஆகக்கூடய கட்டுமானச் செலவை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட பெருங்களத்தூர் – செங்கல்பட்டு இடையே 27 கி.மீ நீளத்திற்கு 6 வழி பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்கு மாற்றாக வேறு திட்டத்தை செயல்படுத்த நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருந்தாலும் கூட, அதனால் எதிர்பார்த்த பயன் கிடைக்காது.

ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன் சென்னை முதல் செங்கல்பட்டு வரை பறக்கும் சாலை அமைக்க வேண்டும் என்று பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகள், நிழல் நிதிநிலை அறிக்கைகள் ஆகியவற்றிலும் கூட இத்திட்டம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வளர்ச்சி சார்ந்த இத்திட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் உள்ளது.

ஜி.எஸ்.டி சாலையில் ஒவ்வொரு நாளும் ஒன்றரை கோடி வாகனங்கள் பயணிக்கின்றன. விடுமுறை நாள்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் போதும், சென்னைக்கு திரும்பும் போதும் இந்த எண்ணிக்கை 50% வரை அதிகரிக்கிறது. அத்தகைய தருணங்களில் செங்கல்பட்டு முதல் சென்னை வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில், எதிர்காலத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவது தான் ஒரே தீர்வாக இருக்கும்.

சாலைகள் தான் நாட்டின் வளர்ச்சிக்கான பாதைகள் ஆகும். சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் திட்ட மதிப்பீடு என்பது ஒரு தடையாக இருக்கக் கூடாது. பெருங்களத்தூர் – செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதால் கிடைக்கும் வளர்ச்சி மற்றும் பொருளாதாரப் பயன்களுடன் ஒப்பிடும் போது, அத்திட்டத்திற்கான செலவு என்பது மிகவும் குறைவு தான். இதைக் கருத்தில் கொண்டு பெருங்களத்தூர் – செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும். அதற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here