”பல மொழிகள் இருந்தால் தான், இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்று திணித்தால், பல நாடுகள் பிறக்கும். அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது,” என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்க கோரி, சென்னை எழும்பூரில் நடந்து வரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற சீமான் பேசியதாவது:
தமிழை மீட்க வேண்டியதும் காக்க வேண்டியதும் கடமை. தங்கள் நிலத்தில் தாய் மொழியை பேசுவதற்கும், வழிபடுவதற்கும் உரிமை உள்ளது. மொழிவாரி மாநிலங்கள் அதற்காகவே பிரிக்கப்பட்டன. இதை பேசினால், பிரிவினைவாதம் பேசுவதாக கூறுகின்றனர்.
இப்போது, நான் சொல்கிறேன். பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்று திணித்தால், பல நாடுகள் பிறக்கும். அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளே வண்டும்.
நாங்கள் பிரிவினை பேசுகிறோம் என்று சொன்னால்; அதை பேசுவதற்கு துாண்டுபவர்கள் ஆட்சியாளர்களே. இந்த போராட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. அதிகாரமற்றவர்கள் போராடத்தான் முடியும். அதிகாரத்தில் இருப்பவர்கள், அதை செயல்படுத்தி கொடுக்க வேண்டும்.
தி.மு.க., 18 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. பிரதீபா பாட்டில், பிரணாப் முகர்ஜி என, இரண்டு ஜனாதிபதிகளை தேர்வு செய்துள்ளது. இருவரும் கையெழுத்து போட்டிருந்தால், தமிழில் வழக்காடும் சட்டம் வந்திருக்கும்.
அப்துல் கலாமிடம் இந்த கோரிக்கையை முன்வைத்து இருந்தால், அவர் கையெழுத்து போட்டு இருப்பார். ஆனால், பிரச்னை முடியக் கூடாது என்று நினைக்கின்றனர். போராடுபவனை விட போராட துாண்டுபவன் தான் ஆபத்தானவன்.
அதிகாரம் மிக வலிமையானது. அதை அடைந்து விட்டால், அனைத்தும் எளிதானது. வேண்டிய, விரும்பிய துறைகளை பெற்று, அதிகாரத்தை அனுபவித்தவர்கள், இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை