ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவிகள் தமிழ்நாட்டிற்கு சென்று விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை மந்திரி அமித்ஷா பேசி இருக்கிறார். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது. ஒரு வாரத்திற்குள் தமிழ்நாட்டு மக்களிடம் மோடியும், அமித்ஷாவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால், பா.ஜ.க அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம்” என்று கூறினார்.
இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில், “தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். மேலும், வரும் அனைவருக்கும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம்.
எப்படி தி.மு.க.வும் காங்கிரசும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம். எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.