சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காகவும் ரூ.7.85 லட்சம் காசோலைகளை வழங்கினார் துணை முதலமைச்சர்

Priya
6 Views
1 Min Read

தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாற்றும் இலக்குடன் செயல்பட்டு வரும் தமிழக அரசு, திறமையான வீரர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று (ஜனவரி 28, 2026) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 8 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் ரூ.7.85 லட்சம் மதிப்பிலான காசோலைகளைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நிதியுதவி பெற்ற வீரர்கள்:

  • தடகளம்: தேசிய அளவில் பதக்கம் வென்ற தடகள வீரர்கள் ஐ.கோகுலபாண்டியன், வீ.நவீன்குமார் மற்றும் வீராங்கனைகள் ஜா.சுஜி, கா.யாமினி ஆகியோருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க மொத்தம் ரூ.1.35 லட்சம் வழங்கப்பட்டது.
  • வில்வித்தை: வீரர்கள் ப.சதீஷ்குமார் மற்றும் ர.பிரித்தீஸ்வரன் ஆகியோருக்கு உபகரணங்கள் வாங்க தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
  • சைக்ளிங்: பிப்ரவரி 2026-இல் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஆசிய பாரா ரோடு சைக்ளிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க பி.பிரதீப் அவர்களுக்கு ரூ.2.50 லட்சமும், ஆசிய ரோடு சைக்ளிங் சாம்பியன்ஷிப்பிற்காக ர.சஞ்சய் அவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டது.

மேலும், கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (Beach Volleyball) பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் துணை முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு மற்றும் எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply