தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தனது கட்சியின் கொடியில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளார். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த கட்சியின் மூவண்ணக் கொடியுடன் கம்பீரமான புலியின் உருவம் சேர்க்கப்பட்டு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று நடைபெற்ற தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் இந்த புதிய கொடியை வேல்முருகன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் தமிழீழத்தில் இருந்து வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் ஆனந்தி சசிதரன், பத்திரிகையாளர் அய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். ஈழத்தமிழர் துயரத்தை நினைவுகூரும் முக்கிய நிகழ்வில் கட்சியின் புதிய அடையாளம் தாங்கிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம் தமிழக அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.