தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. திமுக தலைவரும் முதலமைச்சருமான Stalin தலைமையில் நாளை (பிப்ரவரி 20, 2026) மாலை 6.30 மணியளவில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் என அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தின் மிக முக்கியமான நோக்கமாக ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற பிரம்மாண்ட பரப்புரைத் திட்டம் உள்ளது. வரும் பிப்ரவரி 23-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி (சர்வதேச மகளிர் தினம்) வரை தமிழகம் முழுவதும் இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க திமுக மகளிர் அணியினருக்கு Stalin அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தொகுதி வாரியாக பெண் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் களப்பணிகள் குறித்து நாளை விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 பெண்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்கள் வீடு வீடாகச் சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்க உள்ளனர்.
குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி மற்றும் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியில் அந்தத் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்தப் பிரச்சாரத்தின் பிரதான இலக்காகும். ஏற்கனவே திருவண்ணாமலை மற்றும் விருதுநகரில் நடைபெற்ற இளைஞரணி மாநாடுகள் கட்சிக்காரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பெண்களை ஒருங்கிணைக்கும் இந்த ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ திட்டம் தேர்தலுக்கான மிக முக்கிய வியூகமாகக் கருதப்படுகிறது.
மேலும், பிப்ரவரி 22-ம் தேதி கோவையில் நடைபெறவுள்ள மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைப்பது குறித்தும் Stalin இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகளை வழங்கவுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, அரசின் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்வதில் எவ்வித தொய்வும் இருக்கக்கூடாது என்பதில் முதலமைச்சர் மிக உறுதியாக உள்ளார். நாளைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், தேர்தல் களத்தில் திமுகவின் அடுத்தகட்டப் பாய்ச்சலைத் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

