வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற மே 18 தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றும், விவசாயி சின்னத்திலேயே மீண்டும் களமிறங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டிய சீமான், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாகவும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம அளவிலான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, இளைஞர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் பேசிய பிரபலமான வசனத்தை மேற்கோள் காட்டி தனது அரசியல் பயணத்தின் தொடர்ச்சியை அவர் வலியுறுத்தினார்.