தமிழக ஆளுநராக கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி அதிரடியாக மேற்குவங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, தமிழகத்தின் புதிய பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடந்த வாரம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இன்று மதியம் பதவியேற்பதை முன்னிட்டு, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று அதிகாலை 12.15 மணிக்கு கொச்சியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் காரில் புறப்பட்டு கிண்டி ராஜ்பவனுக்கு சென்றார்.
இதையடுத்து ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்போது கேரளா மாநில ஆளுநராக பணியாற்றி வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழகத்தின் கூடுதல் பொறுப்பையும் கவனிப்பார். பதவியேற்பு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட அமைச்சர்கள், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழா முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய பொறுப்பு ஆளுநருக்கு சால்வை மற்றும் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அவரது மனைவிக்கும் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

