தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் நாகநாதன், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை விமரிசித்துக் கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை ‘டபுள் இன்ஜின்’ முழக்கம் எடுபடாது என்றும், இங்கு எப்போதும் Dravidian Engine தான் வெற்றிகரமாக ஓடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநில உரிமைக்கான போர்
செய்தியாளர்களிடம் பேசிய எழிலன், “இந்தத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கானதல்ல; இது மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் போர். ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவரத் துடிக்கும் ஒன்றிய அரசின் மொழித் திணிப்பு மற்றும் மதவாதக் கொள்கைகளை முறியடிப்பதற்கான களம் இது. கடந்த 2021-ல் ‘டபுள் இன்ஜின்’ என்று கூவினார்கள், ஆனால் மக்கள் ‘திராவிட இன்ஜின்’ தான் வேண்டும் என மு.க.ஸ்டாலின் ஆட்சியைத் தேர்ந்தெடுத்தார்கள்” என்றார்.
திமுக – அதிமுக ஒப்பீடு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சாடிய அவர்:
- வாக்குறுதிகள்: 2021-ல் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், 2016-ல் அதிமுக அளித்த வாக்குறுதிகளில் 33% கூட நிறைவேற்றப்படவில்லை.
- நிவாரணம்: கொரோனா காலத்தில் மக்கள் 5000 ரூபாய் கேட்டபோது நிதி இல்லை என 1000 ரூபாய் மட்டுமே கொடுத்தவர் இபிஎஸ். ஆனால், இன்று 1.18 கோடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.
- தோல்வி முகம்: 2019 முதல் இதுவரை 10-க்கும் மேற்பட்ட தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தொடர் தோல்வியைச் சந்தித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கூட்டணி குறித்து விளக்கம்
திமுக கூட்டணியில் விரிசல் எனப் பரவும் வதந்திகளுக்குப் பதிலளித்த அவர், “எங்கள் கூட்டணியில் இருப்பது ஆதிக்க மனப்பான்மை அல்ல, சகோதரத்துவ மனப்பான்மை. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, தேமுதிக என அனைவரும் சுமுகமாகப் பேசி, மதவாத சக்திகளைத் தடுக்க வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையில் இணைந்துள்ளோம். வெற்றி வாய்ப்பின் அடிப்படையிலேயே தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன” எனத் தெளிவுபடுத்தினார்.

