பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நெருங்குவதால் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பீகார் தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் நரேந்திர மோடி,
“தமிழ்நாட்டில் வேலை செய்யும் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் “என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு திமுக துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி மக்களவை எம்பியுமான கனிமொழி, வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர் என தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியு இருக்கும் பதிவில்,
“வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர். ஆனால், கோவிட் பெருந்தொற்றின் போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு உதவியது என்று அந்த தொழிலாளர்களுக்குத் தெரியும். அடுத்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு வருகையில், பிரதமர் அவர்கள் இதே கருத்தைச் சொல்லட்டும். தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள், தமிழ்நாடு தங்களை எவ்வாறு வைத்துள்ளது என்று. தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்யமுடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசித்துவருகிறார்” என தெரிவித்துள்ளார்.

