தடயம், மனசுக்கு நிறைவைத் தந்திருக்கிறது – சமுத்திரக்கனி நெகிழ்ச்சி

Priya
7 Views
1 Min Read

ZEE5-ல் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி வெளியான ‘தடயம்’ வெப் சீரிஸ், வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இதில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி,
“ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும். ‘தடயம்’ அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விஷயங்களை சரி செய்த மாதிரி உணர்வைத் தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி. நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். ஆனால் அந்த பயணத்தில் இவ்வளவு நேர்மையாக பாராட்டுகளை கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது. அவரும், அஜய், நவீன், KK சார் உள்ளிட்ட பலர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அனைவரின் உழைப்பும் சேர்ந்து தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு அப்பாவிடம் இருந்து பிள்ளைக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரிய விஷயம். அந்த அங்கீகாரம் அஜய்க்கு இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி இங்கேயே நிற்காமல் இன்னும் பல தூரம் எங்களை அழைத்து செல்லும் என்று நம்புகிறேன். இன்னும் பல வெற்றிகளை சேர்த்து மீண்டும் மீண்டும் சந்தித்து இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம்” என்றார்.

இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள இந்த சீரிஸில், சமுத்திரக்கனி, ஷிவதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1990களின் இறுதிக் கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இந்த சீரிஸ், தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயலும் காவல் அதிகாரியின் விசாரணையை மையமாகக் கொண்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply