தமிழகத்தில் முதல் முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ள நிலையில், பரிசீலனைக் கட்டணம், கட்டமைப்பு, வசதி கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்களிக்கப்படுகிறது
தமிழகத்தில் கட்டிடம் மற்றும் மனைப்பிரிவுகளுக்கான அனுமதியை பரப்பளவு, கட்டிடத்தின் உயரம் ஆகியவற்றின் அடிப்படையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வழங்கி வருகின்றன. இந்நிலையில், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அனைத்து வகையான செயல்பாடுகளும் ஆன்லைனில் மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில், 2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு கட்டிட அனுமதி தேவையில்லை. பணி முடிவு சான்று பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழகத்தில் முதல் முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் படி, www.onlineppa.tn.gov.in <http://www.onlineppa.tn.gov.in/> என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அலுவலகத்துக்கு செல்லாமல் நேரத்தை சேமிக்க முடியும். மேலும் கட்டிடப் பணிகள் முடிந்ததும், முடிவுச்சான்று பெறுவதில் இருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது. மேலும் 2500 சதுர அடி வரையிலான மனையில் இருந்து 3500 சதுர அடியில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்திட்டம் பொருந்தும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.