தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை ( SIR ) நவம்பர் 4- ஆம் தேதி முதல் துவங்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதலமைச்சர் மு.க ,ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று ( 27-20-2025) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை குறித்து ஆலோசிக்க நவம்பர் 2 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்று இருந்தனர்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
” தமிழ்நாட்டிலும் #SIR: வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்!
தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் #SIR மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது.
அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது. ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் – பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் SIR மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும்.
மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்!” என தெரிவித்துள்ளார்.

