இந்திய வெளியுறவு அமைச்சகம், யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்திய நிலையில், மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் துல்லியமற்றது: வெளியுறவு அமைச்சகம்
இது குறித்து வெளியுறவு அமைச்சக வட்டாரம், “நிமிஷா பிரியா வழக்கில் சில தனி நபர்கள் பகிரும் தகவல் துல்லியமானது அல்ல” என்று தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மறுப்பு, நிமிஷாவின் விவகாரத்தில் நிலவி வந்த குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் இந்த மறுப்பு, மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் முதலில் வெளியிட்ட தகவலுக்கு முற்றிலும் முரணானது.
இந்த மறுப்புச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில், நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்த மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியார், அந்தப் பதிவை நீக்கியுள்ளார். இது, ஆரம்பத்தில் வெளியான தகவல் சரியானது அல்ல என்பதை உறுதிப்படுத்துவதுடன், நிமிஷாவின் விடுதலை குறித்த நம்பிக்கையில் ஒரு தற்காலிக பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நிமிஷா பிரியா மீதான குற்றப் பின்னணி
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா (38), கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியில் சேர்ந்தார். 2015-ல் அரசு செவிலியர் பணியை ராஜினாமா செய்த நிமிஷா, யேமனைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து அங்கு ஒரு புதிய மருத்துவமனையைத் தொடங்கினார்.
கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்திக்கு நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்தினார். இதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த சனா நகர நீதிமன்றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதை ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதை அடுத்து, ஜூலை 16-ம் தேதி நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஏமன் அரசு அறிவித்திருந்தது.
மரண தண்டனையைத் தவிர்க்கும் முயற்சிகள்
சட்டரீதியான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், மெஹ்தி குடும்பத்தினருக்கு ₹8.6 கோடி குருதிப் பணம் (Blood Money) அளித்து நிமிஷாவை மீட்க அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனிடையே, நிமிஷாவின் மரண தண்டனையைத் தள்ளிவைக்குமாறு மத்திய அரசு சார்பில் ஏமன் அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த விவகாரத்தில் யேமனின் நட்பு நாடான ஈரான் மூலமாகவும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர் கிராண்ட் முப்தி ஏ.பி.அபுபக்கர் முஸ்லியாரும் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியானது. இந்தப் பின்னணியில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என மத்திய அரசு அறிவித்துள்ளது, அவரது குடும்பத்தினருக்கு மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.