இந்தியாவின் உள்கட்டமைப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, நாட்டின் முதல் ‘மெல்லிசை சாலை’ (Melody Road) மும்பையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கடற்கரை சாலையில் (Coastal Road), நரிமன் பாயிண்டிலிருந்து ஒர்லி நோக்கிச் செல்லும் 500 மீட்டர் நீளமுள்ள பகுதியில் இந்த வினோத இசைச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஹங்கேரி நாட்டின் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சாலையை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்தச் சாலையின் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் மேற்பரப்பில் ‘ரம்பிள் பட்டைகள்’ (Rumble Strips) எனப்படும் பிரத்யேகக் கோடுகள் குறிப்பிட்ட இடைவெளியில் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு வாகனம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் இந்தச் சாலையில் செல்லும்போது, அதன் டயர்களுக்கும் சாலைக்கும் இடையே ஏற்படும் உராய்வின் மூலம் ஆஸ்கார் விருது பெற்ற ‘ஜெய் ஹோ’ (Jai Ho) பாடலின் இசை ஒலிக்கிறது. இந்தத் தேசபக்தி மெல்லிசை வாகனத்தின் உள்ளே இருக்கும் பயணிகளுக்கு ஒரு புதிய மற்றும் உற்சாகமான அனுபவத்தைத் தருகிறது.
இது குறித்து முதல்வர் பட்னாவிஸ் பேசுகையில், “மும்பை மாநகராட்சி மேற்கொண்டுள்ள இந்த முயற்சி வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான பயணத்தை உறுதி செய்யும். உலகளவில் ஹங்கேரி, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே இத்தகைய தொழில்நுட்பம் உள்ளது. தற்போது இந்தியா ஐந்தாவது நாடாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். சாலை பாதுகாப்பு மற்றும் சலிப்பற்ற பயணத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மெல்லிசைச் சாலை பரிசோதனை முயற்சியாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் வாகன ஓட்டிகளை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் (70-80 கி.மீ) செல்லத் தூண்டுவதால், சாலை விதிமீறல்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வாகனத்தின் வேகம் மாறினால் பாடலின் சுருதி (Pitch) மாறும் என்பதால், சரியான வேகத்தில் செல்லும்போது மட்டுமே ‘ஜெய் ஹோ’ பாடலைத் துல்லியமாகக் கேட்க முடியும். மும்பை மாநகராட்சியின் இந்த வினோத முயற்சியை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

