பயங்கரவாத ஏற்றுமதிக்கு கடும் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரில் ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரு பதற்றமான சூழலைச் சந்தித்தன. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாக இந்தியா சந்தேகங்களை எழுப்பியது. இந்தச் சம்பவத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. நான்கு நாட்கள் நீடித்த இந்த மோதலுக்குப் பிறகு இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன.
இந்த நிலையில், ராஜஸ்தானின் அனூப்கார் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திரா திவிவேதி, பாகிஸ்தானுக்கு மிகவும் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். “பாகிஸ்தான் தனது பயங்கரவாத ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ வெகு தொலைவில் இல்லை” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
“உலக வரைபடத்தில் இருக்க வேண்டுமா என்று சிந்திக்கட்டும்”
கடந்த ‘ஆபரேஷன் சிந்தூர் 1.0’ தாக்குதலின் போது இந்தியப் படைகள் காட்டிய நிதானம், அடுத்த மோதலில் இருக்காது என்று ராணுவத் தளபதி மிகவும் உறுதியான தொனியில் எச்சரித்தார். “இந்த முறை இந்தியப் படைகள் எந்தக் கட்டுப்பாட்டுடனும் நடந்துகொள்ளாது. பாகிஸ்தான் உலக வரைபடத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று விரும்பினால், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், அவர்கள் உலக வரைபடத்தில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று சிந்திக்கும்படியான சூழ்நிலையை இந்தியா உருவாக்கும்,” என்று அவர் கூறினார்.
மேலும் அவர் தனது பேச்சின் இறுதியில், போர்முனைக்குத் தயாராகும் விதமாக ராணுவ வீரர்களுக்கு ஊக்கமளித்தார். “கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும். நீங்கள் அனைவரும் முழுமையாகத் தயாராக இருங்கள்” என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை
ராணுவ தளபதியின் இந்த எச்சரிக்கையானது, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த சமரசமும் இல்லை என்பதையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ளப் போவதில்லை என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை இந்தியா உலகிற்கு வெளிப்படுத்தியதையும் ஜெனரல் திவிவேதி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ இராணுவ நடவடிக்கை, இந்தியா தனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது எவ்வளவு வேகமாக, துல்லியமாக மற்றும் தீர்மானத்துடன் பதிலடி கொடுக்கும் என்பதைக் காட்டியுள்ளது. ராணுவ தளபதியின் இந்த ஆவேச எச்சரிக்கை, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் அடுத்த கட்ட இராணுவ நடவடிக்கையின் சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியுள்ளதுடன், படைகளின் போர் தயார்நிலையை உறுதிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.