முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கேரளா இடையே நிலவி வந்த நிலையில், சமீபத்தில் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையைக் கட்டுமாறு கேரள அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கவியரசு வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் கவிதை வடிவில் கோபமாக பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் ,
முல்லைப் பெரியாறு என்பது நதியல்ல;தமிழ்நாட்டின் ரத்த ஓட்டம்
‘வையை என்னும்
பொய்யாக் குலக்கொடி’ என்று
சிலப்பதிகாரம் பாடிய
ஜீவநதிக்குக்
கல்லறைகட்ட விடமாட்டோம்
வரலாறு மற்றும்
புவியியல் அடிப்படையில்
முல்லைப் பெரியாறு மீது
தமிழர்களுக்குத் தார்மீக
உரிமை இருக்கிறது
தமிழ்நாட்டரசு
மற்றும்
உச்ச நீதிமன்றத்தின்
ஒப்புதல் இல்லாமல்
அணைகட்ட முடியாது என்ற
சட்ட உரிமையும் எமக்கிருக்கிறது
ஐந்து மாவட்டங்கள்
நெல்லற்றுப் புல்லற்றுப்
பாலைவனமாக விடமாட்டோம்
கேரளத்தை மதிக்கிறோம்
ஆனால்
முல்லைப் பெரியாற்றைத்
துதிக்கிறோம்
முல்லைப் பெரியாறு
எங்கள் தாய்ப்பால்;
தாயின் மார்பகத்தை
அறிந்தோ அறியாமலோ
அரிந்து விடாதீர்கள்