சென்னை அம்பத்தூரில் மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் பா.விஜய் மற்றும் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது விழா மேடையில் பேசிய நடிகர் சத்யராஜ்,
வடநாட்டிலிருந்து மதப்புயல் தமிழகத்தை நோக்கி வீசிக் கொண்டிருக்கிறது. அதை உள்ளே விட்டுவிடாதீர்கள். விடவும் மாட்டோம். தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்களுக்கு இதுபற்றி நன்றாகவே தெரியும்.
வடநாட்டைச் சேர்ந்தவர்களுக்குதான் அது மதப் புயல். நமக்கு அது மடப்புயல். தமிழ்நாட்டில் அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் அண்ணன் தம்பிகளை போல ஒற்றுமையாக பழகிக் கொண்டிருக்கிறோம். மதத்தை சாராத என்னை போன்றவர்களும், ஏதோவொரு மதத்தை சேர்ந்தவரும் என அனைவரும் ஒன்றுக்குள் ஒன்றாக பழகி வருகிறோம். இப்படி இருக்கும் சூழலில் எப்படி மதத்தை வைத்து இங்கு அரசியல் செய்ய முடியும்?
நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் ஒரு காமெடியான விஷயம் நடந்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு சமஸ்கிருதம் தெரிய வேண்டுமென விதிகள் இருந்துள்ளது. சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான் மருத்துவ சீட்டுகள் கிடைக்கும் என்ற சட்டம் வைத்தால்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சேர முடியாது என கொண்டுவந்தார்கள். தற்பொழுது அதே திட்டத்தைதான் நீட் என கொண்டு வந்திருக்கிறார்கள்.
நம்மை படிக்க விடக்கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு எதையோ செய்கிறார்கள்… ஆனால் நாமும் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இன்று எவ்வளவோ பெரிய பெரிய இடங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் பெரிய ஆட்களாக வந்து விட்டார்கள். இதுதான் திராவிட ஆட்சியின் மிகப்பெரிய சாதனை.
பேரறிஞர் அண்ணாவின் தொண்டர்களான கலைஞர், எம்ஜிஆர், ஸ்டாலின் என அனைவருமே பெரியார் வழி வந்தவர்கள்தான். எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டைதான். ஆனால், பகையாளியை உள்ளே விட்டுவிடக் கூடாது. இந்த விஷயத்தில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, தொடர்ந்து நன்மைகளை செய்து கொண்டேதான் இருக்கும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துக் செல்லும் என்று பேசினார்.