வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்தியா திரும்பும் போது கொண்டு வரும் தங்க நகைகளுக்கான விதிகளில் ஒன்றிய அரசு அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ‘பேக்கேஜ் விதிகள்’ மாற்றப்பட்டு, பிப்ரவரி 2, 2026 முதல் புதிய சுங்கப் பேக்கேஜ் ஒழுங்குமுறை 2026 (Baggage Rules 2026) அமலுக்கு வந்துள்ளது.
தங்கத்தின் விலை சர்வதேச அளவில் விண்ணைத் தொட்டுள்ள நிலையில், பழைய விதிகளின்படி இருந்த பண மதிப்பிலான உச்சவரம்பு பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இதனைச் சரிசெய்யும் விதமாக, புதிய விதிகளில் ‘பண மதிப்பு’ நீக்கப்பட்டு, ‘எடை’ மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கும் மேலாக வெளிநாடுகளில் வசித்துவிட்டு தாயகம் திரும்பும் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.
புதிய விதிமுறைகள் என்ன?
புதிய சுங்கப் பேக்கேஜ் ஒழுங்குமுறை 2026 விதிகளின்படி, பெண் பயணிகள் 40 கிராம் எடை வரையிலான தங்க நகைகளைச் சுங்க வரி ஏதுமின்றி கொண்டு வரலாம். அதேபோல், ஆண் பயணிகள் 20 கிராம் வரையிலான நகைகளை வரி இல்லாமல் கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள்.
முன்பு இருந்த விதிகளின்படி, பெண்கள் 40 கிராம் கொண்டு வந்தாலும் அதன் மதிப்பு ஒரு லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால், தற்போதைய தங்கம் விலையில் 40 கிராம் என்பது சுமார் 6 லட்சம் ரூபாயைத் தொடுவதால், பழைய ஒரு லட்ச ரூபாய் வரம்பு நடைமுறைக்குச் சாத்தியமற்றதாக இருந்தது. தற்போது அந்தப் பண வரம்பு நீக்கப்பட்டிருப்பதால், பயணிகள் எடையை மட்டும் கணக்கில் கொண்டு நிம்மதியாக வரலாம்.
இதர முக்கிய மாற்றங்கள்
தங்க நகைகள் தவிர்த்து, வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் மற்ற பொருட்களுக்கான வரி இல்லா வரம்பும் (Duty-free limit) ரூ.50,000-லிருந்து ரூ.75,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட எடையைத் தாண்டி தங்கம் கொண்டு வருவோர், அதற்கான 9% சுங்க வரியைச் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் தாங்கள் கொண்டு வரும் நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் குறித்த விவரங்களை ‘இந்திய சுங்க அறிவிப்புப் படிவத்தில்’ (Indian Customs Declaration Form) முறையாகக் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுங்கப் பேக்கேஜ் ஒழுங்குமுறை 2026 மாற்றமானது, குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

