அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான ஆம் குவாஹ்தெமோக் (ARM Cuauhtémoc) என்ற உயரமான பாய்மரக் கப்பல் மோதியதில் விபத்து ஏற்பட்டது. மே 17 ஆம் தேதி இரவு 9 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கப்பலின் 150 அடி உயர பாய்மரங்களில் ஒன்று பாலத்தில் மோதி முறிந்தது. இந்த விபத்தில், பாய்மரங்களில் இருந்த பல கடற்படை வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் ப்ரூக்ளின் கடற்படை தளத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். அமெரிக்காவின் 250வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொது மக்கள் பார்வைக்காக மே 13 ஆம் தேதி முதல் இந்த கப்பல் பியர் 17-ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஈஸ்ட் ஆற்றில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பாலம் சேதமடையவில்லை எனத் தெரிகிறது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.