அமெரிக்கப் பொருளாதார வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு அதிரடி மாற்றத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ கரன்சி நோட்டுகளில் (Currency Note) இதுவரை கருவூலச் செயலர் மற்றும் பொருளாளர் ஆகியோரின் கையெழுத்து மட்டுமே இடம்பெற்று வந்த நிலையில், இனி அதிபரின் கையெழுத்தும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று மாற்றம்
அமெரிக்கக் கருவூலத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதிதாக அச்சிடப்படவுள்ள அனைத்து டாலர் நோட்டுகளிலும் அதிபர் டொனால்ட் டிரம்பின் கையெழுத்து பொறிக்கப்படும். அமெரிக்க வரலாற்றிலேயே பதவியில் இருக்கும் ஒரு அதிபரின் கையெழுத்து பணத்தாளில் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும். இந்த நோட்டுகளில் டிரம்பின் கையெழுத்துடன் கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் கையெழுத்தும் இடம்பெறும்.
கௌரவமும் எதிர்ப்பும்
- ஆதரவு: “நாட்டின் வரலாற்றுச் சாதனைகளை அங்கீகரிக்க டாலர் நோட்டுகளில் அதிபர் டிரம்ப் பெயர் இடம்பெறுவதை விட வலிமையான வழி இருக்க முடியாது” என ஸ்காட் பெசென்ட் புகழாரம் சூட்டியுள்ளார்.
- அங்கீகாரம்: அமெரிக்காவின் 250-வது ஆண்டு நாளை முன்னிட்டு டிரம்பின் உருவம் பொறித்த 24 காரட் தங்க நாணயங்களை வெளியிடவும் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- எதிர்ப்பு: இருப்பினும், நாட்டின் பொதுவான நிதி அடையாளத்தில் தனிநபர் அடையாளத்தைப் புகுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முந்தைய அதிரடிகள்
ஏற்கனவே அமெரிக்க அமைதி நிறுவனம் மற்றும் கென்னடி கலை மையம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றிய டிரம்ப், புதிய போர்க்கப்பல்களுக்கும் தனது பெயரைச் சூட்டியுள்ளார். அந்த வரிசையில் இப்போது அமெரிக்காவின் பண மதிப்பிலும் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் கரன்சி நோட்டுகளை அச்சிடும் ‘செதுக்குதல் மற்றும் அச்சிடுதல் துறை’ (BEP) இதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

