தமிழ்நாட்டில் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி 0 முதல் 400 யூனிட் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ₹4.60 பைசாவிலிருந்து 4.80 பைசாவாக உயர்ந்திருக்கிறது
401 முதல் 500 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹6.15 பைசாவில் இருந்து ₹6.45 பைசாவாக உயர்ந்திருக்கிறது
501 முதல் 600 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹8.15 பைசாவில் இருந்து ₹8.55 பைசாவாக உயர்ந்திருக்கிறது.
601 முதல் 800 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹9.20 பைசாவில் இருந்து ₹9.65 பைசாவாக உயர்ந்திருக்கிறது
801 முதல் 1000 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹10.20 பைசாவில் இருந்து ₹10.70 பைசாவாக உயர்ந்திருக்கிறது
1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இனி ₹11.80 பைசா என்ற விகிதத்தில் வசூலிக்கப்படும்.
இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்படும்.
அதே போல 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை. அது வழக்கம்போல தொடரும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
மின் கட்டண உயர்வுக்கான காரணங்கள் குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “2011 -12 ஆம் ஆண்டில் 18,954 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பு, 10 ஆண்டுகளில் 94,312 கோடி ரூபாய் மேலும் அதிகரித்து, 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை 1,13,266 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நிதி இழப்பை அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிபாட்டை போல முந்தைய காலத்தில் உறுதிப்பாடு வழங்கப்படாததால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
2011-12 ஆம் ஆண்டில் 43,493 கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை 10 ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரித்து 1,59,823 கோடி ரூபாயாக மாறியுள்ளது.
இதனால் 2011 -12 ஆம் ஆண்டில் 4,588 கோடி ரூபாயாக இருந்த கடன்களின் மீதான வட்டி, 259 விழுக்காடு அதிகரித்து 16,511 கோடி ரூபாயாக அதிகரித்தது.
இவ்வாறு அதிகரித்து வரும் நிதி இழப்பை ஈடுகட்ட, நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில், ஆண்டுதோறும் சிறிய அளவில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
மின் விநியோக முறையை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு, ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனை. தற்போதைய அரசு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி ஏற்ற வேண்டிய கட்டணத்தை விட குறைவாகவே, கடந்த காலங்களில் மின் கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது.
இம்மாதத்தை பொறுத்தவரை, நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்களின்படி 4.83 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டுமெனவும், அதன்படி பொதுமக்களுக்கும், தொழில் முனைவோருக்கும் சிறிய அளவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” என தமிழ்நாடு அரசு தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
எனினும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் தங்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.