தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், காணொளி வாயிலாக அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,
நம் கூட்டணி கட்சியினர், தோளோடு தோளாக நீண்டகாலமாக கொள்கை உணர்வுடன் பயணிக்கின்றனர். அதனால் நட்புணர்வோடு கலந்து, தொகுதி பங்கீடு செய்திருக்கிறோம். சில தொகுதிகளை பெற்று, சில தொகுதிகளை விட்டுக் கொடுத்திருக்கிறோம்.
பலம் வாய்ந்த பெரிய கூட்டணியில், இது இயல்பானது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பை தாண்டி, கட்சியின் நலன் முக்கியம்; தமிழகத்தின் நலன் முக்கியம்; நாட்டின் எதிர்காலம் தான் முக்கியம் என, வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.
மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கும், மாவட்ட செயலர்களுக்கும் அவரவர் மாவட்டங்களை சேர்ந்த சட்டசபை தொகுதிகளில், ஓட்டுக்களை கூடுதலாக பெற்று தரும் பொறுப்பு சாரும்.
ஒரு சட்டசபை தொகுதியில் ஓட்டு குறைந்தாலும், அதற்கு அந்தந்த மாவட்டச் செயலரும் பொறுப்பு, அமைச்சரும் தான் பொறுப்பு.
தொகுதி மட்டுமில்லாமல், தேர்தலுக்கு பின் ஒன்றிய, நகரம், பகுதி, பேரூர் அளவில் ஓட்டு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன்.
எந்த இடத்தில் ஓட்டு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை இப்போதே சொல்லி விடுகிறேன். இதை ரொம்ப கண்டிப்போடும் சொல்கிறேன்.
எல்லா தொகுதியிலும், ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம் தான் எல்லாரிடமும் இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.