தமிழக அரசு சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில் போதிய நிதி இல்லா சூழலில் தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களில் 13ல் 12 நிதிப் பற்றாக்குறையால் செயல்பட முடியாமல் திணறி வருவதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான ஊதியம், கட்டுமானப் பராமரிப்பு என அடிப்படை தேவைகளுக்கே நிதி இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களைப் பாழ்படுத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
திராவிட இயக்கத்தின் அடிப்படையான கல்வியின் உறைவிடங்களான பல்கலைக்கழகங்களையே நிர்வகிக்கத் திராணியற்ற திரு. ஸ்டாலின், தனது விடியா ஆட்சியை “திராவிட மாடல்” என்று மார்தட்டிக்கொள்வது வெட்கக்கேடானது; ஆளுநரை எதிர்க்கிறோம் என்ற பெயரில் விடியா அரசு நடத்தும் விளம்பர அரசியல் நாடகத்தால் துணைவேந்தர்களை நியமிக்காமலும், நிதி நிர்வாகம் செய்யத்தவறியும் மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உடனடியாக அரசு நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களின் நிதிநிலை குறித்து ஆராய்ந்து, உரிய நிதி ஒதுக்கி, மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.