தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளதால் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 29ம் தேதி வரை, சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், மேலும் சில இடங்களில் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் வலுவான தரைக்காற்று வீசும் என்றும் கூறியுள்ளனர்.
வெப்பநிலையை பொறுத்தவரை, இன்னும் நான்கு நாட்களுக்கு கடந்த வாரத்தை விட வெப்பநிலை அதிகமாக காணப்படும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், அதிகபட்சமாக, 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் சின்னக்கல்லாரில், 4 செ.மீ மழையும், . பந்தலுார், அவலாஞ்சியில் 5 செ.மீ மழையும், மாஞ்சோலை, கூடலுார், வால்பாறை, முள்ளங்கினாவிளை, காக்காச்சி பகுதிகளில் 2 செ.மீ மழையும், தக்கலை, நடுவட்டம், குந்தா, எமரால்டு, கொட்டாரம், குளச்சல், சோலையார், ஆழியார் போன்ற பகுதிகளில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேலும் மத்திய வடக்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திரா, தெற்கு அந்தமான், மத்திய தென்கிழக்கு அரபிக் கடலோர பகுதிகளில், மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு வரும் 26ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.