இந்தோனேசியாவில் வாங்கிய நிலக்கரியை அதானி நிறுவனம் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மூன்று மடங்கு விலைக்கு விற்றது தெரியவந்தது.
ஜனவரி 9, 2014 அன்று 69,925 டன் நிலக்கரியை தமிழ்நாடு மின்வாரியத்துக்காக அதானி நிறுவனம் எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. 2014 ஜனவரி முதல் அக்டோபர் வரையில் மட்டும் 24 கப்பல்கள் தலா 70,000 டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்துள்ளன.
24 கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அனைத்தும் தமிழ்நாடு மாநில மின்சார வாரியத்திற்கு விற்கப்பட்டது. போலி ஆவணங்களை உருவாக்கி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிலக்கரி விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டினார்.
குற்றங்கள் மற்றும் ஊழலை அம்பலப்படுத்தும் OCCP அமைப்பு, அதானி நிலக்கரி ஊழலை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது. அதானி நிறுவனம், இந்தோனேஷியாவில் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை வாங்கி, உயர்தர நிலக்கரி என்ற பெயரில் தமிழக அரசுக்கு விற்பனை செய்தது.
நிலக்கரியின் விலை மற்றும் தரத்தை உயர்த்துவதற்காக, பல்வேறு நாடுகள் வழியாக வருவதுபோல் ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்துள்ளது.
இந்தோனேசியாவில் டன் ஒன்றுக்கு ரூ.2,330க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கரி, தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு டன் ரூ.7650-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விலையை உயர்த்தி காட்டுவதற்காக பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், சிங்கப்பூர் வழியாக நிலக்கரி வந்ததாக ஆவணங்கள் தயாரித்துள்ளது.
அதானி நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து பிரிட்டனின் புகழ்பெற்ற பத்திரிகையான பைனான்சியல் டைம்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டது. நிலக்கரி இறக்குமதி ஊழல் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.6,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
போலி விலைப்பட்டியல் சமர்ப்பித்து அதானி நிறுவனம் செய்த மோசடிக்கு தமிழ்நாடு மின்சார ஆணையமும் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு சாட்டப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து விசாரணை நடத்தக்கோரி அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. எடப்பாடி முதல்வராக இருந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.