“மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்” – யோகி பாபு

Priya
10 Views
2 Min Read

யோகி பாபு நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆர்.பி. டாக்கீஸ் சார்பில் ரமேஷ் பாபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் புகழ்பெற்ற சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே அவர் காலமானார். இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழுவினர் அனைவரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்துத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யோகி பாபு, “இந்தப் படம் பரவலான ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்று இயக்குநர் சுரேஷ் சங்கையா கனவு கண்டார்; அந்தக் கனவு இன்று நனவாகியுள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களிடம் இருந்து மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த எங்கள் நண்பர்கள் அளித்த உறுதுணையான ஆதரவுதான். இன்றைய சூழலில், ஒரு படத்தின் இயக்குநர் உடன் இருந்து வழிநடத்த முடியாத நிலையிலும், அப்படம் வெளியாகி பாராட்டத்தக்க வகையில் மக்களை சென்றடைகிறது என்றால், அதற்கு முழுமுதற் காரணம் நீங்கள் தான்.

வழக்கமான நகைச்சுவை வேடங்களைத் தாண்டி, புதுமையான மற்றும் பரிசோதனை முயற்சிகளில் ஆன கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய ஊக்கத்தால்தான், என்னால் இத்தனை மாறுபட்ட மற்றும் அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்க முடிகிறது.

இந்தப் படத்தை தயாரித்து வெளியிட்ட தயாரிப்பாளருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரை போன்ற தரமான தயாரிப்பாளர்கள் இந்த துறைக்கு கிடைத்த வரப்பிரசாதம்; இவர் தொடர்ந்து இன்னும் பல நல்ல படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சாமானிய மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, நான் தொடர்ந்து நடிப்பேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply