வட மாவட்டங்களில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டு வட மஞ்சு விரட்டு பின்னணியில் உருவாகியுள்ள படம் தான் வடம். மாட்டை கல்லில் கட்டி வைத்து குறிப்பிட்ட சுற்றளவில் ஓடச் செய்து பிடிக்கும் இந்த விளையாட்டை மையமாகக் கொண்டு பழிவாங்கல் கதையை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குநர் கேந்திரன்.
சிங்கம்புணரியில் வசிக்கும் வெற்றி (விமல்) சிறு வயதிலிருந்தே பாண்டிமுனி என்ற காளையை அன்போடு வளர்க்கிறார். ஒரு கண் பார்வையை இழந்த அந்த மாட்டை தம்பி போல பார்த்துக்கொள்ளும் வெற்றி, அதை பல வடமஞ்சு போட்டிகளில் வெற்றி பெறச் செய்கிறார். ஊர்த்தலைவராக இருக்கும் சந்தனவேல் (நரேன்) அவரின் தந்தை. மற்றொரு பக்கம், எந்தப் போட்டியிலும் தோல்வி அறியாத ரத்னவேல் (நட்டி) ஜெயிக்கும் காளைகள் அனைத்தும் தன்னிடமே இருக்க வேண்டும் என்ற அகங்காரத்துடன் வாழ்பவர். பாண்டிமுனி காளையை வாங்க முயற்சிக்கும் அவர், வெற்றி மறுப்பதால் கடும் பகையை வளர்த்துக்கொள்கிறார். அந்த பகை இறுதியில் வெற்றியை ஒரு கொலை வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பும் அளவுக்கு பெரிதாகிறது. உண்மையில் என்ன நடந்தது? யார் குற்றவாளி? என்பதே கதையின் மீதிப் பயணம்.
கிராமத்து இளைஞனாக விமல் ஓரளவு பொருந்துகிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் உற்சாகமாக நடித்துள்ளார். பாண்டிமுனி காளையுடன் அவருக்குள்ள பாச பிணைப்பு சில இடங்களில் நன்றாக வேலை செய்கிறது. ஆனால் உணர்ச்சி வசப்பட்ட காட்சிகளிலும் காதல் பகுதிகளிலும் அவரது நடிப்பில் ஆங்காங்கே செயற்கைத் தனம் தெரிகிறது. வில்லனாக வரும் நட்டி சில இடங்களில் வில்லத்தனத்தை காட்டினாலும் முழுமையாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நரேன் தந்தையாக உணர்ச்சிகரமான நடிப்பை அளிக்கிறார். முனிஷ்காந்த் குணசித்திர வேடத்தில் கவனிக்க வைக்கிறார். பாலசரவணன் காமெடி பெரிய அளவில் சிரிப்பை ஏற்படுத்தவில்லை. நாயகியாக வரும் சனஸ்கா வழக்கமான கிராமத்து ஹீரோயின் மாதிரியாக வந்து செல்கிறார்.
டி. இமான் இசையில் கிராமத்து மணம் உணர முயற்சி செய்திருக்கிறார். பின்னணி இசை, குறிப்பாக மஞ்சு விரட்டு காட்சிகளில் விறுவிறுப்பை கூட்டுகிறது. பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவில் கிராமத்து சூழல் இயல்பாக தெரிகிறது. ஆனால் வடமஞ்சு விரட்டு விளையாட்டின் தனித்துவத்தை இன்னும் தெளிவாகவும் உயிரோட்டமாகவும் காட்டியிருக்கலாம் என்ற குறை உணரப்படுகிறது.
மாடு மீது பாசம், பகை, சண்டை, பழிவாங்கல் என கமர்ஷியல் அம்சங்கள் இருந்தாலும், திரைக்கதையில் வலுவான சுவாரஸ்யம் இல்லை. முக்கிய திருப்பங்கள் முன்கூட்டியே யூகிக்க முடிவது படத்தின் பெரிய பலவீனம். வடமஞ்சு விரட்டு என்ற புதுமையான களத்தை எடுத்திருந்தாலும், அதில் முழுமையான ஈர்ப்பை உருவாக்க முடியாமல் படம் தடுமாறுகிறது. நல்ல வாய்ப்பு இருந்தும் முழுமையாக பயன்படுத்தப்படாத முயற்சியாக வடம் தோன்றுகிறது.

