நடுத்தர வர்க்க குடும்பங்களின் பொருளாதார போராட்டங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் தான் கார்மேனி செல்வம். சாதாரண ஆசைகள் — சொந்த வீடு, கார் — இவற்றை அடைய முயற்சிக்கும் ஒரு குடும்பம், கடன் சுமையில் சிக்கி எப்படி தவிக்கிறது என்பதையே படம் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லுகிறது.
டாக்சி டிரைவராக இருக்கும் சமுத்திரக்கனி மற்றும் அவரது மனைவி லட்சுமி பிரியா, சிறிய கனவுகளை நனவாக்க கடன் வாங்க தொடங்குகிறார்கள். ஆனால் அந்த ஆசையே அவர்களை கடன் சுழலில் சிக்கவைத்து, அவமானங்களும் நெருக்கடிகளும் நிறைந்த வாழ்க்கைக்குத் தள்ளுகிறது. இந்த நிலையை சமாளிக்க வெளிநாடு செல்லும் சமுத்திரக்கனியின் பயணம், அவரின் குடும்பத்தின் எதிர்காலம் என்ன ஆகிறது என்பதே கதையின் மையம்.
இயக்குநர் அருண் சக்ரி, நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கையை மிக நெருக்கமாகவும் உண்மைக்கு அருகாமையாகவும் சித்தரித்துள்ளார். “அகலக்கால் வைக்கும் ஆசை” மற்றும் “கண்டபடி கடன் வாங்கும் பழக்கம்” எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பல சின்ன சின்ன காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் வலியுறுத்துகிறார். குறிப்பாக, குடும்ப அவமானங்கள், கணவன்-மனைவி இடையிலான சண்டைகள், பணத்திற்காக எடுக்கப்படும் தவறான முடிவுகள் ஆகியவை பார்ப்பவர்களை சிந்திக்க வைக்கின்றன.
சமுத்திரக்கனி தனது வழக்கமான இயல்பான நடிப்பில் ஒரு நடுத்தர குடும்பத் தலைவனின் துடிப்பையும் தவிப்பையும் நம்பவைக்கிறார். சில இடங்களில் அவரின் ‘அட்வைஸ்’ பாணி மற்றும் நாடகத் தன்மை அதிகமாக இருந்தாலும், கதையின் உணர்வை எடுத்துச் செல்ல உதவுகிறது. லட்சுமி பிரியா, ஒரு குடும்ப பெண்ணின் பொறுப்பும் வேதனையும் மிக நம்பகமாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். கௌதம் மேனன், அபிநயா உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்க்கின்றன.
முதல் பாதி இயல்பாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் வேகம் குறைவதும், வெளிநாட்டு காட்சிகள் நீளமாக இருப்பதும் குறையாக தெரிகிறது. சில காட்சிகளில் செயற்கைத் தன்மை மற்றும் சினிமாத்தனமும் தோன்றுகிறது.
எனினும், தேவையற்ற ஆசைகள், கடன் வாழ்க்கையின் ஆபத்துகள், குடும்பத்தின் முக்கியத்துவம் போன்ற கருத்துகளை தெளிவாக சொல்லும் இந்த படம், ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாமல், ஒரு விழிப்புணர்வு படமாகவும் திகழ்கிறது.

