சின்னத்திரையில் நகைச்சுவை மூலம் பிரபலமான கே.பி.ஒய். பாலா, ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் நாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். இயக்குநர் ஷெரிப் இயக்கியுள்ள இந்தப் படம், உறவுகளுக்கும் பணத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு உணர்வுபூர்வமான கதைக் களத்துடன் வந்திருக்கும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் ரசிகர்களின் மனதை வென்றதா என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
பணமே வாழ்க்கை என்று நினைக்கும் கதிர் (கே.பி.ஒய். பாலா) ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்துகிறான். ஆனால், அவனுக்கு முற்றிலும் நேர்மாறாக, உறவுகளுக்கும் பாசத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழும் ஒரு கிராமத்து மனிதர் காந்தி (பாலாஜி சக்திவேல்). தனது மனைவி கண்ணம்மாவின் (அர்ச்சனா) ஆசைக்காக, தனது 60வது திருமண நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டும் என அவர் நினைக்கிறார். இதற்காக, தனது நிலத்தை விற்று பல கோடி ரூபாயுடன் சென்னைக்கு வருகிறார்.
காதல், பாசம் நிறைந்த காந்தியின் கனவை நிறைவேற்ற, கதிர் குழுவை அணுகும் அதே நேரத்தில், நாட்டில் பணமதிப்பிழப்பு அமலாகிறது. கையில் இருக்கும் பணத்தை மாற்ற முடியாமல் காந்தி தவிக்க, பணத்தாசை கொண்ட கதிர் என்ன முடிவெடுத்தான்? காந்தியின் கனவு நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் உணர்வுபூர்வமான கதை.
நகைச்சுவை நடிகராகப் பார்த்த பாலாவை, ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் பார்ப்பது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக உள்ளது. குறிப்பாக, பாலாஜி சக்திவேலுடன் அவர் இணைந்து வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சியில் பாலா வெளிப்படுத்தும் நடிப்பு, ஒரு நாயகனாக அல்லாமல், ஒரு நடிகராக அவர் முத்திரை பதிக்க முயற்சித்திருப்பதை உணர்த்துகிறது. அதேபோல், காந்தி மற்றும் கண்ணம்மாவாக நடித்த பாலாஜி சக்திவேல், அர்ச்சனா இருவரின் யதார்த்தமான நடிப்பு, கதைக்கு பலம் சேர்க்கிறது. இவர்களின் காதல் காட்சிகள் பார்வையாளர்களைக் கவர்கின்றன.
படம் ஒரு நல்ல கருவை எடுத்துக்கொண்டு நகர்ந்தாலும், திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு தெரிகிறது. பணம், உறவு, பாசம் எனப் பல செய்திகளை ஒரே படத்தில் சொல்ல முயற்சிப்பதால், கதை மெதுவாக நகர்கிறது. சில காட்சிகளில் வரும் நாடகத்தன்மை படத்தின் வேகத்தைக் குறைக்கிறது. ஒரு சில கதாபாத்திரங்களின் மிகையான நடிப்பு, படத்தின் இயல்பான தன்மையைக் குறைப்பதாக உள்ளது. ஒட்டுமொத்தமாக, உறவுகளுக்கும் பணத்திற்கும் இடையிலான போராட்டம், நல்ல நோக்கத்துடன் சொல்லப்பட்டிருந்தாலும், அதை திரையில் கொண்டு வந்த விதத்தில் சில தடுமாற்றங்கள் உள்ளன.
கமர்ஷியல் படமாக இல்லாமல், ஒரு எமோஷனல் டிராமாவாக இந்தப் படத்தை அணுகிய கே.பி.ஒய். பாலாவின் முயற்சி பாராட்டுக்குரியது. பாலாஜி சக்திவேல், அர்ச்சனா ஆகியோரின் சிறப்பான நடிப்புக்காகவும், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மனித உணர்வுகளுக்காகவும் ‘காந்தி கண்ணாடி’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.


