Bison: ‘படத்தின் பல காட்சிகளில் என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது’- பைசன் படத்திற்கு அண்ணாமலை பாராட்டு!..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘Bison’ (பைசன்) திரைப்படத்தை பார்த்து விட்டு, முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சியுடன் பாராட்டு.

Surya
By
Surya
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments,...
167 Views
2 Min Read
Highlights
  • பைசன் திரைப்படத்திற்கு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு.
  • சகோதரர் மாரி செல்வராஜ் , மேலும் பலப்பல அற்புதமான திரைப்படங்களைத் தர வேண்டும்- அண்ணாமலை
  • மக்களை ஒன்றிணைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமையவும், சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாகத் தொடர வேண்டும்.- அண்ணாமலை

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி, இளம் நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் வெளியாகி பெரும்  வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு திரைத்துறையினர்,மற்றும் முக்கிய பிரபலங்கள்  பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 இந்த வரிசையில்  முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பைசன் படத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

” அன்புச் சகோதரர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள, பைசன் – காளமாடன் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அற்புதமான, உணர்வுப் பூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார். அவருக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு கிராமத்து இளைஞன், தனது லட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சந்திக்கும் சவால்கள், சமூகம் சார்ந்த சிக்கல்கள் என, அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் சகோதரர் மாரி செல்வராஜ். திரைப்படத்தின் பல காட்சிகளில், உணர்வுப் பூர்வமாக என்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது.

அர்ஜுனா விருது வென்ற இந்தியக் கபடி வீரர் திரு. மணத்தி கணேசன் அவர்களது வாழ்க்கையை, மிக அற்புதமாக திரையில் தந்திருக்கிறார் சகோதரர் மாரி செல்வராஜ். அவரது சாதனை அத்தனை எளிதாகக் கிடைத்து விடவில்லை. சாதிக்க விரும்பும் இளைஞனுக்கு, சமூகம் பல வழிகளில் வேலியிட்டாலும், அந்த வேலியின் உயரத்தைத் தாண்டி வளர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான நம் மண்ணைச் சேர்ந்த நாயகன் திரு. மணத்தி கணேசன் அவர்கள் வரலாற்றை, மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். மேலும், சமூக ஒற்றுமை வேண்டும் என்ற தனது ஆழ்ந்த விருப்பத்தையும், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வெளிப்படுத்தியிருக்கிறார்.   

கதாநாயகன் திரு. துருவ், இந்தத் திரைப்படத்துக்காக தன்னையே அர்ப்பணித்திருப்பதை உணர முடிகிறது. அண்ணன் திரு. பசுபதி அவர்கள், திரு. லால் அவர்கள் ஆகியோரின் நடிப்புத் திறனைக் குறித்து நான் புதியதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அனைத்து நடிகர்களுமே தங்கள் அற்புதமான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சகோதரர் மாரி செல்வராஜ் , மேலும் பலப்பல அற்புதமான திரைப்படங்களைத் தர வேண்டும். மக்களை ஒன்றிணைக்கவும், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமையவும், சமூகம் சார்ந்த அவரது பயணம் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்”. என தெரிவித்துள்ளார்.

Share This Article
Surya is a passionate Tamil news journalist dedicated to delivering timely, accurate, and reader-friendly stories. With a focus on politics, social issues, cinema, and people-centric developments, she brings clarity and depth to every report. Her articles aim to inform, engage, and empower readers with trustworthy journalism.
Leave a Comment

Leave a Reply