நடுக்கடலை பின்னணியாகக் கொண்டு அதிகாரம், கோபம், அச்சம், உயிர்ப்போர் ஆகிய உணர்வுகளை மோதவைக்கும் ஒரு முயற்சி. கதையின் மையக்கரு எளிமையானதாக இருந்தாலும், அதை ‘சர்வைவல் த்ரில்லர்’ பாணியில் சொல்ல முயன்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவில் கடற்கரையைச் சூழலாகக் கொண்டு நகரும் இந்தப் படம், ஒரு தந்தையின் ஆவேசத்தையும், ஒரு இளைஞனின் உயிர் காக்கும் போராட்டத்தையும் மையமாகக் கொண்டுள்ளது. அதிகாரத்தால் பழகிய ஒருவன் திடீரென கட்டுப்பாட்டை இழக்கும் சூழ்நிலை உருவாகும்போது மனித மனத்தில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதையே படம் ஆராய முயல்கிறது.
மூர்த்தியாக சரத்குமார், கடினமான வெளிப்புறத்துக்குள் பதுங்கியுள்ள பயமும் பதட்டமும் கலந்த மனிதரை வெளிப்படுத்துகிறார். ஆரம்பத்தில் முழுக்க முழுக்க ஆவேசத்தால் இயக்கப்படும் மனிதராகத் தோன்றும் அவர், பின்னர் சூழ்நிலையால் தள்ளப்பட்டபோது முகத்தில் தெரியும் குழப்பம், வலியால் உண்டாகும் உடல் மொழி மாற்றங்கள் போன்றவை கதாபாத்திரத்தின் உள்மாற்றத்தை உணர்த்துகின்றன.
அருளாக இந்திரஜித், பயத்துக்கும் துணிவுக்கும் இடையில் சிக்கிய இளைஞனின் நிலையை நம்பகமாக வெளிப்படுத்துகிறார். அவரின் எதிர்வினைகள், உயிர் காக்கும் உடல் மொழி, தளராத மனநிலை ஆகியவை படத்தின் பதற்றத்தை தாங்கிச் செல்கின்றன.
சரத்குமார் மகளாக நடித்துள்ள தேவிகா சதீஷ், குறைந்த காட்சிகளிலேயே உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்துகிறார். வளர்ப்பு நாய் ‘லக்கி’ கிளைமாக்ஸில் ஏற்படுத்தும் உணர்ச்சி தருணங்கள் நினைவில் நிற்கின்றன.
தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவு கடலின் பரப்பையும், குறுகிய படகின் உள் நெருக்கடியையும் நுணுக்கமாகப் பதிவு செய்கிறது. ஒலி வடிவமைப்பு நடுக்கடலில் சிக்கியிருக்கும் உணர்வை தீவிரப்படுத்துகிறது. ஜாஸ்ஸி கிஃப்ட் இசையில் பாடல்கள் பெரிய தாக்கம் அளிக்காதாலும், சில பின்னணி இசைத் துணுக்குகள் பரபரப்பை உயர்த்துகின்றன.
இயக்குநர் மாதவ் ராமதாஸன் தேர்ந்தெடுத்த ஒரே இடத்தில் நடக்கும் திரைக்கதை வடிவம், சுவாரஸ்யமானது. ஆனால், திருப்பங்களில் புதுமை குறைவு, சில கணிக்கக்கூடிய முன்னேற்றங்கள் போன்றவை படத்தின் ஆழத்தை சற்றே குறைக்கின்றன.
மொத்தத்தில், ‘ஆழி’ முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், நடுக்கடலில் நடக்கும் உயிர்ப்போராட்டத்தை மையமாகக் கொண்ட வித்தியாசமான முயற்சியாக நினைவில் நிற்கிறது.
ஆழி – சினிமா விமர்சனம்

Leave a Comment
