நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையேயான விவாகரத்து விவகாரம், நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. ரவி மோகன் தனது திருமண வாழ்வு குறித்து சில கருத்துகளை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ஆர்த்தி ரவி தற்போது ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்த்தி ரவி தனது அறிக்கையில், தங்கள் திருமண முறிவுக்கு காரணம் பணமோ, அதிகாரமோ, அல்லது குடும்பத் தலையீடோ அல்ல என்றும், தங்கள் வாழ்வில் ஒரு மூன்றாம் நபர் நுழைந்ததே காரணம் என்றும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். “உங்கள் வாழ்க்கையின் ஒளி” என்று ரவி மோகன் யாரைக் குறிப்பிடுகிறாரோ, அவர்தான் தங்கள் வாழ்க்கையில் இருளைக் கொண்டு வந்ததாகவும், இந்த மூன்றாம் நபர் விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தங்கள் திருமண உறவுக்குள் வந்துவிட்டதாகவும் ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார். இதை வெறும் சந்தேகம் என்று கூறவில்லை என்றும், இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
ரவி மோகன் தன்னை ஒரு “அதிகார எண்ணம் கொண்ட, கணவனைக் கட்டுப்படுத்தும் மனைவி” என்று சித்தரிப்பதாக ஆர்த்தி தனது அறிக்கையில் மறுத்துள்ளார். தனது கணவரின் நலனுக்காகவும், குடும்பத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருந்த சில தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்களில் இருந்து அவரைக் காப்பாற்றவும் தான் முயற்சித்ததாகவும், அதை கட்டுப்படுத்துவதாகக் கூறுவது வேடிக்கையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு அன்பான மனைவியும் தனது கணவரின் நல்வாழ்வுக்காக இதைத்தான் செய்வார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ரவி மோகன் தனது வீட்டை விட்டு வெறும் கால்களில், உடமைகளை இழந்து, கண்ணியமில்லாமல் வெளியேறியதாகக் கூறியதையும் ஆர்த்தி ரவி மறுத்துள்ளார். அவர் தனது அறிக்கையில், “உண்மை என்னவென்றால்? அவர் பிராண்டட் காலணிகளுடனும், முழு உடையுடனும், அவரது பணப்பையை அணுகும் வசதியுடனும், ரேஞ்ச் ரோவருடனும், அவர் எடுத்துச் செல்ல விரும்பிய மற்ற அனைத்து உடைமைகளுடனும் வெளியேறினார். அவர் வெளியேற்றப்படவில்லை. அவர் அமைதியாகவும், உணர்வுபூர்வமாகவும், ஒரு திட்டத்துடனும் வெளியேறினார்,” என்று கூறியுள்ளார். ரவி மோகன் உண்மையில் தனது “கட்டுப்பாட்டில்” இருந்து தப்பிக்க விரும்பியிருந்தால், நேரடியாக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்றும், ஆனால் அவர் மேலும் சேதத்தை ஏற்படுத்தும் ஒரு கதவைத் தட்டியதாகவும் ஆர்த்தி சாடியுள்ளார்.
தங்கள் குழந்தைகள் ரவி மோகனை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் ஆர்த்தி ரவி மறுத்துள்ளார். கடந்த ஒரு ஆண்டில் ரவி மோகன் குழந்தைகளை நான்கு முறை மட்டுமே சந்தித்துள்ளதாகவும், அதுவும் அவருடைய விருப்பத்தின் பேரிலேயே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளின் தொலைபேசிகள் ஒருபோதும் தடுக்கப்படவில்லை என்றும், அவர்கள் தந்தையின் வருகை இல்லாததால் மனமுடைந்து போயுள்ளனர் என்றும் ஆர்த்தி கூறியுள்ளார். ரவி மோகன் உண்மையாகவே குழந்தைகளுடன் உறவை விரும்பியிருந்தால், எந்த ஒரு பவுன்சரும் அவரை தடுக்க முடியாது என்றும், குழந்தைகள் தங்கள் தந்தை தாத்தா பாட்டி வீடு அல்லது அலுவலகம் போன்ற பழக்கமான இடங்களில் மட்டுமே சந்திக்க பாதுகாப்பாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். ரவி மோகன் தனது தற்போதைய வசிப்பிடத்தில் சந்திக்க குழந்தைகளை வற்புறுத்தியது, அவர்களின் மன அமைதியைக் கெடுத்தது என்றும், அவர் இதுவரை குழந்தைகளைச் சந்திக்க அல்லது காப்பாளர் உரிமையைக் கோரவில்லை என்றும் ஆர்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, விவாதப் பொருளாக மாறியுள்ளது.