கேரளத்தின் மண்ணில் பிறந்து, உலகளாவிய சமூக அவலங்களுக்கு தனது வரிகளால் குரல் கொடுக்கும் ஒரு கலைஞன்; சாதிய அடக்குமுறைகள், வர்க்கப் பாகுபாடுகள், அரசியல் அநீதிகள் என சமூகத்தின் அத்தனைப் பிளவுகளுக்கும் அனல் தெறிக்கும் வார்த்தைகளால் சவுக்கடி கொடுக்கும் ராப் போராளி – அவர்தான் ஹிரந்தாஸ் முரளி என்ற உலகறியப்பட்ட வேடன்.
திருச்சூரின் ரயில்வே சத்தங்கள் நிறைந்த ‘ஸ்வப்னபூமி’யில் வளர்ந்த வேடன், ஒரு சாதாரணப் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தாயார் ஈழத் தமிழ் அகதியாய், பல நிலப்பரப்புகளைக் கடந்து கேரளத்தில் தஞ்சம் புகுந்தவர். இந்தப் பன்முகப் பின்புலம், வேடனின் வரிகளில் ஆழமான சமூகப் புரிதலையும், ஒடுக்கப்பட்டோரின் வலிகளையும் கொண்டு சேர்த்தது. சிறுவயதிலிருந்தே கவிதைகள் மீது தீராத காதல் கொண்ட அவர், தமிழ் பாடல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்துப் பாடி, தனது கலைப் பயணத்தின் விதையை விதைத்தார்.

‘வேடன்’ என்ற பெயர் அவருக்குச் சிறுவயதில் மீன் பிடிக்கும் போது விளையாட்டாகச் சூட்டப்பட்டதே. ஆனால், அந்தப் பெயருக்குப் பின்னால் இருந்த ஆழமான சாதிய அடையாளத்தை உணர்ந்தபோது, அதே பெயரிலேயே தன்னை சமூகத்துக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார். இது வெறும் பெயர் மட்டுமல்ல, அது அவரது இசையைப் போலவே ஒரு அடையாளப் பிரகடனம். கட்டுமானத் தொழிலாளி, அலுவலக உதவியாளர் எனப் பல பணிகளில் பயணித்த வேடன், எமினெம், துபாக் ஷகூர், அறிவு போன்ற ராப் கலைஞர்களின் இசையால் வசீகரிக்கப்பட்டார். அவர்களின் வரிகளில் இருந்த வலி, உணர்ச்சிப் பெருக்கு, வேடனைப் போலவே ஒடுக்குமுறைகளை அனுபவித்த மக்களின் வரலாற்றை அவர் அறியத் தூண்டியது. அந்தத் தேடலின் விளைவே ராப் ஆனது.
2020 ஜூன் மாதம், மலையாள ராப் உலகமே வேடனின் முதல் இசைக் காணொளியான “Voice of the Voiceless”-ஆல் அதிர்ந்தது. “நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல…” எனத் தொடங்கும் அவரது வரிகள், ஜாதிய, வர்க்க, மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஓங்கி ஒலித்தன. கூர்மையான வார்த்தைகள், ஆழமான உணர்ச்சிகள், வேடனின் சக்திவாய்ந்த குரல் என அனைத்தும் இணைந்து, “யார்டா இந்தப் பையன்?” என மலையாளிகளை வியப்பில் ஆழ்த்தின. இந்தப் பாடல், அவரை மலையாள ராப் இசையின் புதிய முகமாக, ஒரு புரட்சிகரக் குரலாக நிலைநிறுத்தியது.
“Voice of the Voiceless” கொடுத்த வெற்றியின் அலை அடங்குவதற்குள், “பூமி நான் வாழுனிடம்” (Bhoomi Njan Vazhunidam) போன்ற மேலும் பல சக்திவாய்ந்த பாடல்களை வேடன் வெளியிட்டார். அவரது பாடல்கள் பாலஸ்தீனத்தில் நடந்த உரிமைப் போராட்டங்கள் முதல் அமெரிக்காவில் நடந்த இனவெறித் தாக்குதல்கள் வரை உலகின் பல்வேறு சமூக ஒடுக்குமுறைகள் குறித்து தைரியமாகவும், நேர்மையாகவும் பேசின. அவரது இசை, கேரளத்தின் நிதர்சனமான சமூக-அரசியல் யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக அமைந்தது.

திரைப்பட உலகிலும் வேடன் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். 2021 இல் வெளியான ‘நாயாட்டு’ திரைப்படத்தில் “நரபலி” பாடலுக்குக் குரல் கொடுத்தார். ஆனால், ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது, 2024 இன் ப்ளாக்பஸ்டர் படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ (Manjummel Boys) படத்தில் அவர் எழுதிப் பாடிய “குதந்திரம்” பாடல். இந்தப் பாடல் அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்தது.
நோ வே அவுட்’ படத்தில் “மரணத்தின் நிறம்” மற்றும் ‘கொண்டல்’ படத்தில் “கொண்டல் வேடன் சாங்” எனப் பல படங்களுக்குப் பங்களித்தார்.சர்வதேச அரங்கிலும் வேடன் தனது தடத்தைப் பதித்துள்ளார்.

வேடனின் கலைப் பயணம் சர்ச்சைகளிலிருந்து தப்பவில்லை. போதைப்பொருள் கடத்தல் மற்றும் புலிப் பல் வைத்திருந்த வழக்குகள் அவரது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தின. மேலும், 2021 இல், சில இளம் பெண்கள் அவர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை சமூக ஊடகங்களில் முன்வைத்தனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அவர் பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார். இவை அனைத்தும் அவரது வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள்.
ஆயினும், இந்த சவால்களுக்கு மத்தியிலும், வேடன் தனது திறமையாலும், சமூகப் பொறுப்புணர்வு கொண்ட வரிகளாலும் மலையாள ராப் உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளார். அவரது இசை, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாகவும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.
வேடன் ஒரு கலைஞன் மட்டுமல்ல, அவர் ஒரு சமூகத்தின் மனசாட்சி.