தமிழக பகுதிகளின் மீது நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் வலுவடைந்து வருகிறது. மேலும் கிழக்கு, வடகிழக்கு பகுதிகளில் இருந்து வரும் காற்று, நிலப்பகுதி வெப்பத்தால் மேலெழுந்து வரும் நீராவி காற்று, வடக்கு, வடமேற்கு பகுதிகளில் இருந்து வரும் காற்று ஆகியவை வளிமண்டல சுழற்சியில் இணைந்துள்ளன.
இதனால், தமிழகத்தின் தெற்கு, மேற்கு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
மேலும் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருநெல்வேலி, கோவை ஆகிய, 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதைத்தொடர்ந்து நாளை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கோவையில் ஒரு சில இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16 ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, மதுரை, விருதுநகர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த, 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.