மாயஜால யதார்த்தக் கதையாக உருவாகிவரும் ‘டபுள் ஆக்குபன்சி’

Priya
10 Views
1 Min Read

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த ரொமான்டிக் ஃபேண்டஸி திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், தற்போது இறுதிக்கட்ட பின்தயாரிப்பு பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது.

காதல், கற்பனை மற்றும் அடையாளம் குறித்த சமகால சிந்தனைகளை உள்ளடக்கிய ‘டபுள் ஆக்குபன்சி’, தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான மோதல், ஒருவரை இரண்டு வெவ்வேறு வடிவங்களில் நேசிப்பதில் உள்ள வலிமிகுந்த அழகு ஆகியவற்றை மையமாக வைத்து இந்த மாயாஜால யதார்த்தக் கதை பின்னப்பட்டுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் மிகவும் சவாலான முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘கட்சி சேரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். மேலும், துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் ‘நான் மகான் அல்ல’, ‘அந்தகாரம்’ படங்களில் தனது மிட்டலான நடிப்பால் முத்திரை பதித்த வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இயக்குநர் அஸ்வின் கந்தசாமி, தனது முதல் படத்திலேயே ஒரு அழுத்தமான முத்திரையைப் பதிக்கத் தயாராகிவிட்டார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு, சந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்து, ரிலீஸுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply