தமிழ்நாட்டின் அரிய கானுயிர்கள் மற்றும் பல்லுயிர்ச் சூழல் ஆகியவற்றைப் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தியுள்ள ‘வைல்டு தமிழ்நாடு’ என்ற ஆவணப்படத்தைச் சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதை நாடு முழுவதும் உள்ள பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் பொதுமக்கள் காணலாம்.
காப்புக் காடுகள், அவற்றின் அரணாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலை, வளம் மிக்க சமவெளி, வறண்ட பாலை, மீன்வளம் மிக்க நீண்ட பெரும் கடற்கரை என தமிழ்நாட்டின் ஐந்திணை நிலங்களில் வாழும் உயிரினங்களை பொதுமக்கள் இதுவரை பார்த்திராத கோணத்தில், அரிய தகவல்களுடன், மிக அண்மை காட்சிப் பதிவுகளாகக் கண்டுணரும் வகையிலும் இந்த ஆவணப்படத்தை 4 ஆண்டுகள் காத்திருந்து உருவாக்கியுள்ளனர்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களின் வழியாகப் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
அந்த வரிசையில், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, வருங்காலத் தலைமுறைக்கு நமது பல்லுயிர் வளங்களைக் காக்க வேண்டிய பொறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், காட்சி ஆவணமாக ‘வைல்டு தமிழ்நாடு’, சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. ஒரு மணி நேர ஆவணப்படமான இதை, ‘நேச்சர் இன்ஃபோகஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு வனத்துறையின் ஒத்துழைப்புடன் பெரும் பொருட்செலவில் சுந்தரம் ஃபாஸனர்ஸ் இதைத் தயாரித்துள்ளது.
சுவாரஸியமான திரைப்படத்துக்கே உரிய கதை சொல்லலுடன் இப்படத்தை இயக்கியிருக்கிறார், இயற்கை மற்றும் வனவிலங்கு ஆவணப்பட இயக்குநரான கல்யாண் வர்மா. இப்படத்துக்கு நடிகர் அரவிந்த் சுவாமி, வர்ணனை கொடுத்துள்ளார். 3 முறை கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ், கர்நாடக இசையையும் மேற்கத்திய வாத்தியங்களையும் நேர்த்தியாக இணைத்து பின்னணி இசையை அமைத்துள்ளார்.
இப்படத்தைக் காணும்போது, இவை நம்முடைய விலங்குகளும் பறவைகளுமா என வியந்துபோகும் வகையில் அரிய விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றின் வாழ்க்கைப் பக்கங்களைக் கண்டு வியக்கலாம். நாடு முழுவதும் 30-க்கும் குறையாத திரையரங்குகளில் இப்படத்துக்கான திரையிடல் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்பட முன்னெடுப்பு குறித்து சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆரத்தி கிருஷ்ணா கூறும்போது, “நமது இயற்கை பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் இதுபோன்ற நேர்த்தியான சிறந்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனம் ஆர்வம் கொண்டுள்ளது. நமது பல்லுயிர்ச் சூழல் மீது ஆழ்ந்த அன்பையும், அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் மக்களின் மனதில் உருவாக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

