“நான் கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே கொத்துப் பரோட்டா போட்டுவிட்டனர் என விஜய் சொல்லியிருக்கிறார். அவர் 10 நிமிடம் பேசியிருந்தால், அவரை மக்கள் கொத்து பரோட்டா போட்டிருப்பார்கள். அவர் எழுதிக் கொடுத்த 5 நிமிட வசனத்தை தான் பேசுவார்; 6-வது நிமிடம் பேசியிருந்தால் மக்கள் ஓடியிருப்பார்கள்,” என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: தமிழக மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு சென்றாலும் தவெகவினர் கஞ்சா விற்பனை செய்கிறார்கள். திருமயம் தொகுதியில் தவெகவில் இருக்கக்கூடிய பலர் மணல் கடத்துகிறார்கள்.
எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது என அதிகாரிகள் சொல்கின்றனர். லஞ்சம் வாங்காத விஜய் சார், சிறுவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய விஜய் சார், அந்த மேலிடம் யார்? . உங்கள் ஆட்சியில்தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. முதல்வரே கொஞ்சம் கண்களை விழித்துப்பாருங்கள்.
நான் கொளத்தூரில் 5 நிமிடம் பேசியதற்கே கொத்துப் பரோட்டா போட்டுவிட்டனர் என சொல்லியிருக்கிறார். நீங்கள் 10 நிமிடம் பேசியிருந்தால், உங்களை கொத்து பரோட்டா போட்டிருப்பார்கள். எழுதிக் கொடுத்த 5 நிமிட வசனத்தை தான் நீங்கள் பேசுனீர்கள்; 6-வது நிமிடம் பேசியிருந்தால், உங்களுக்கா ஓட்டு என மக்கள் ஓடியிருப்பார்கள்.
ஒரே சட்டப்பேரவை உறுப்பினராக கருணாநிதி இருந்து, பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் நாங்கள். அதன்பிறகு 13 ஆண்டுகள் கழித்தும் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். எந்த சோதனைகளையும் தாங்கும் இயக்கம் திமுக. ஊழல் மகாசக்தி, பராசக்தியாக முதல்வர் விஜய் இருக்கிறார் என்பதற்கு கரூரும், பழநியும்தான் எடுத்துக்காட்டு. தமிழகத்தில் நிரந்தர கூட்டணியும் கிடையாது; நிரந்தர எதிரிகளும் கிடையாது.
ஆனால் நாங்கள் அதிமுக பக்கம் போகமாட்டோம். தனித்து நின்று வெல்லக் கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்த இயக்கமாக திமுகவை மாற்றிக் காட்டுவோம். நித்தம் நித்தம் கொலை, கொள்ளை, பாலியல் கொள்ளை நடக்கும் ஆட்சி தவெகவின் ஆட்சி.
கரூரில் முதல்வர் விஜய் பேசியது ஆணவம், அகங்காரம், இறுமாப்பின் எடுத்துக் காட்டு. அடக்கமாக முதல்வருக்கு ஏற்ற வகையில், அவரின் பேச்சு இல்லை. மற்ற மாநிலங்கள் நம்மை பார்த்து கிண்டல் செய்கின்றனர். கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் இன்று ஒன்றும், நாளை ஒன்றும் பேசுவார்கள்; அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை” இவ்வாறு அவர் கூறினார்.

