சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணித் தனியார் எரிபொருள் நிறுவனமான ஷெல் இந்தியா (Shell India), பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்று (ஏப்ரல் 1, 2026) அதிரடியாக உயர்த்தியுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஷெல் நிறுவனத்தின் புதிய விலை நிலவரம் (சென்னை):
இன்று காலை முதல் ஷெல் பெட்ரோல் பங்குகளில் அமலுக்கு வந்துள்ள புதிய விலைப் பட்டியல்:
- டீசல்: ஒரு லிட்டருக்கு ரூ.25.01 உயர்த்தப்பட்டு, ரூ.123.52-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- பெட்ரோல்: ஒரு லிட்டருக்கு ரூ.7.41 உயர்த்தப்பட்டு, ரூ.119.85-க்கு விற்பனையாகிறது.
- பவர் பெட்ரோல்: ஒரு லிட்டர் ரூ.129.85-ஆக உயர்ந்துள்ளது.
விலை உயர்வுக்கான பின்னணி:
ஏற்கனவே வளைகுடாப் போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக ஷெல் நிறுவனம் விலையை ஏற்றியுள்ளது.
- ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பேரல் ஒன்றின் விலை 113 டாலரைத் தாண்டியுள்ளது.
- தனியார் நிறுவனங்களின் நெருக்கடி: பொதுத்துறை நிறுவனங்களான IOCL, BPCL போன்றவை விலையை இன்னும் உயர்த்தாத நிலையில், நஷ்டத்தைத் தவிர்க்கும் நோக்கில் ஷெல் மற்றும் நாயரா போன்ற Private Fuel Retailers விலையை உயர்த்தத் தொடங்கியுள்ளன.
பொதுத்துறை பங்குகளில் நிலை என்ன?
ஷெல் போன்ற தனியார் பங்குகளில் விலை தாறுமாறாக உயர்ந்தாலும், இந்தியன் ஆயில் போன்ற பொதுத்துறை பெட்ரோல் பங்குகளில் விலை இப்போதைக்கு மாற்றமின்றி நீடிக்கிறது. சென்னையில் பொதுத்துறை பங்குகளில் பெட்ரோல் சுமார் ரூ.100.84-க்கும், டீசல் ரூ.92.39-க்கும் விற்பனையாகி வருகிறது. இதனால் மக்கள் அதிகளவில் பொதுத்துறை பங்குகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

