திமுக துணைப் பொதுச்செயலாளரும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவருமான கனிமொழி எம்பி, சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திமுக மற்றும் அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டு, திமுகவின் DMK Manifesto ஏன் தனித்துவமானது என்பது குறித்து விளக்கமளித்தார்.
80,000 கருத்துகளின் தொகுப்பு
“தமிழகத்தின் வளர்ச்சியை மையப்படுத்தி இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து சுமார் 80,000 மனுக்கள் மற்றும் கருத்துகளைப் பெற்றுள்ளோம். வெறும் வெற்று வாக்குறுதிகளாக இல்லாமல், எவற்றைச் செயல்படுத்த சாத்தியம் இருக்கிறதோ, அவற்றை மட்டுமே வாக்குறுதிகளாக வழங்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தார்” என கனிமொழி தெரிவித்தார்.
இல்லத்தரசி கூப்பன் திட்டம்: ஒரு புதிய முயற்சி
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ‘இல்லத்தரசி கூப்பன்’ திட்டம் குறித்து அவர் கூறுகையில்:
- மக்களுக்கு ஒரு பொருளை நேரடியாக வழங்கும்போது, அது அவர்களின் தேவைக்கு மாறாக இருக்கலாம்.
- எனவே, மக்களுக்கு ‘சாய்ஸ்’ (விருப்பம்) வழங்க வேண்டும் என்பதற்காகவே கூப்பன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- வருமான வரி செலுத்தாத குடும்பப் பெண்கள், இந்தக் கூப்பன்களைப் பயன்படுத்தித் தங்களுக்குத் தேவையான மிக்ஸி, டிவி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவோ அல்லது மேம்படுத்தவோ (Upgrade) முடியும்.
உண்மைக்கே செல்வாக்கு
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ள சூழலில், மக்கள் எதை நம்புவார்கள் என்ற கேள்விக்கு, “யார் சொல்வதை நிறைவேற்றுவார்கள் என்பதும், யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதும் மக்களுக்குத் தெரியும். உண்மையை மட்டுமே பேசக்கூடிய தேர்தல் அறிக்கைக்கே மக்களிடம் மரியாதையும் செல்வாக்கும் இருக்கும்” என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

